Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 01 ஜூன் (ஹி.ச.)
ராணிப்பேட்டை அருகே செட்டித்தாங்கல் கிராமம் லாலாபேட்டை தெருவை சேர்ந்த வேலாயுதம் (70) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இவருக்கும் அவரது உடன்பிறந்த தம்பிக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தம்பி, பட்டன் கத்தியால் அண்ணன் வேலாயுதத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த வேலாயுதம் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, காயமடைந்த முதியவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சொத்து பிரச்சனை காரணமாக உடன்பிறந்த சகோதரர்களுக்குள் ஏற்பட்ட மோதல் கத்திக்குத்து சம்பவமாக மாறியிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN