Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)
பாரதிராஜா மறைவிற்கு
முன்னாள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து புதிய திரைப்போக்கை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையை அளிப்பதாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,
தமிழ்ச் சினிமாவை ஸ்டூடியோக்களிலிருந்து கிராமங்களுக்குக் கொண்டு சென்ற பெருமை பாரதிராஜாவுக்கே உரியது என்றும், கிராமத்து மக்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் திரையில் யதார்த்தமாகப் பதிவு செய்து தமிழ்ச் சினிமாவுக்கு புதிய அடையாளத்தை உருவாக்கியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகள் தமிழ்ச் சினிமா வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார்.
தலைவர் மு. கருணாநிதி மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த பாரதிராஜா, தமிழ் மொழி மற்றும் தமிழின உரிமைகளுக்கான போராட்டங்களில் திரையுலகினரை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றியதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா, இளையராஜா மற்றும் வைரமுத்து ஆகியோரின் கூட்டணியில் உருவான பாடல்கள் இன்றளவும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒலித்துக்கொண்டே இருந்து மக்களை மகிழ்வித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, பாரதிராஜாவின் குடும்பத்தினர், திரையுலகக் கலைஞர்கள், அவரது மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள ஸ்டாலின், “அல்லிநகரத்தில் பிறந்து அழியாத படைப்புகளை அளித்த பாரதிராஜா, தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்” என்று கூறியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P