Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்னையில் இன்று காலமானார்.
நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜா உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் நடிகை ராதிகா, சீமான், சிவகுமார், சூர்யா, சுகன்யா, கவிஞர் வைரமுத்து என பலரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா மறைவை முன்னிட்டு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவால் மிகுந்த துயரமடைந்தேன். கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்திய அவரது படைப்புகள் தமிழ் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்துள்ளன. அவரின் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அவரது மறைவை அனுசரிக்கும் வகையில் நாளை திரைத்துறை சார்ந்த அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு திரைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b