Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)
மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் நல்வாழ்வுக்காகவும் மாநில அளவில் தன்னலமின்றி சிறப்பான முறையில் பணியாற்றி வரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில், தமிழக அரசு மாநில விருதுகளை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் சாதனையாளர்களுக்கு, முதலமைச்சர் விஜய் நேரில் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் சமூக உள்ளடக்கம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்கள் இந்த விருதுக்கு தகுதியானவர்கள் ஆவர்.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது சேவை விவரங்கள் மற்றும் சாதனைகளை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான tn.gov.in-ல் உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் ஜூன் 25-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் அனைத்தும் மாநில அளவிலான தேர்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விருதாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவின் போது, முதலமைச்சரால் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இந்த முன்னெடுப்பு, சமூக சேவையில் ஈடுபடுவோரை ஊக்குவிப்பதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வையும் சமூகத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b