Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 10 ஜூன் (ஹி.ச.)
மேற்குவங்க சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சி எதிர்பாராத தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்த நிலையில், கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அடுத்தடுத்து அரசியல் அதிர்ச்சிகள் ஏற்பட்டுவருகின்றன.
தேர்தல் தோல்வியின் தாக்கம் இன்னும் அடங்காத நிலையில், கட்சியின் முக்கிய மாநிலங்களவை உறுப்பினர்கள் இருவர் அடுத்தடுத்து விலகியிருப்பது தேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்குவங்கத்தில் ஆட்சியை தக்க வைத்திருந்த திரிணாமுல் காங்கிரஸ், அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்தது.
இதன் மூலம் மம்தா பானர்ஜியின் அரசியல் ஆதிக்கத்திற்கு பெரிய சவால் உருவானது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் அதிகரித்து வருவது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
இந்த நிலையில், மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சுகேந்து சேகர் ராய், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் கட்சி உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்தார்.
கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் தலைமைத்துவம் குறித்து அதிருப்தி இருப்பதாக அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து கட்சி மீளும் முன்பே, மற்றொரு முக்கிய மாநிலங்களவை உறுப்பினரான சுஷ்மிதா தேவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மாநிலங்களவை தலைவர் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021-ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்த அவர், கட்சியின் தேசிய அளவிலான முக்கிய முகமாகவும், செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.
சுஷ்மிதா தேவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை அவர் சந்தித்ததாக வெளியான தகவல்கள், அவர் பாஜகவில் இணையக்கூடும் என்ற ஊகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P