Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 11 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற மெகா டிஎஸ்சி ஆசிரியர் தேர்வு மற்றும் நியமன செயல்முறையில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,
டிஎஸ்சி தேர்வு தொடர்பாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மாநில அரசு மேற்கொண்டதாக கூறப்படும் முறைகேடுகள் காரணமாக லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு எதிர்பார்த்த இளைஞர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
டிஎஸ்சி தேர்வு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், கேள்வித்தாள் தயாரித்தல் மற்றும் தேர்வு நடத்தும் பொறுப்புகள் ஒரே அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் ஜெகன் கூறினார்.
இதனால் கேள்வித்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டு ஒதுக்கீட்டில் முறைகேடு
விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற ஆசிரியர் நியமனங்களிலும் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாக ஜெகன் குற்றம்சாட்டினார்.
தகுதித் தேர்வு எழுதாத சிலருக்கு பங்கேற்புச் சான்றிதழ்களின் அடிப்படையில் வேலை வழங்கப்பட்டதாகவும், தேசிய அளவில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மொத்தம் 270 பேர் தகுதித் தேர்வு எழுதாமலேயே விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிபிஐ விசாரணை அவசியம்
இந்த விவகாரத்தில் மாநில அரசே குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பதால், மாநில அளவிலான விசாரணையில் நியாயம் கிடைக்காது என்றும், சிபிஐ விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும் என்றும் ஜெகன் வலியுறுத்தினார்.
மேலும், இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் கல்வித்துறை அமைச்சர் லோகேஷ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA