Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 11 ஜூன் (ஹி.ச.)
மத்திய அரசின் 12 ஆண்டுகால ஆட்சியில் ஏற்பட்ட தோல்விகளுக்கு பதில் சொல்லும் தைரியம் பாஜகவுக்கு உள்ளதா என்று ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா சவால் விடுத்துள்ளார்.
ராஜ்யசபா உறுப்பினர் பதவி தொடர்பாக பாஜக தலைவர்கள் தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், இது வாக்குறுதி கொடுத்தவர்களுக்கும் பெற்றவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம் என்றும் தெரிவித்தார். மக்கள் பிரச்சினைகள் மற்றும் அரசின் தோல்விகள் குறித்து கேள்வி எழுப்பும்போது, அதற்கு பதில் அளிக்க முடியாமல் வேறு விஷயங்களை பாஜக முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் ஷர்மிளா கூறியதாவது:-
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை 300 சதவீதம் வரை உயர்ந்ததற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதி ஏன் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் தெரிவிக்க வேண்டும். நாடு முழுவதும் நடைபெற்ற தேர்வு வினாத்தாள் கசிவுகள் குறித்து அரசு பதில் சொல்ல வேண்டும்.
பெண்கள் அதிகாரமடைந்துள்ளதாக கூறும் மத்திய அரசு, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச்செயல்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மத்திய அரசு பெற்றுள்ள லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன்கள் எவ்வாறு செலவிடப்பட்டன என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஏன் சரிவடைந்தது? விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? என்பதற்கும் பதில் அளிக்க வேண்டும்.
மேலும், மத அடிப்படையிலான பிரிவினை அரசியலை பாஜக மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டிய ஷர்மிளா, அரசியலமைப்பு அமைப்புகளின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மக்கள் ஆதரவை பெறுவதற்குப் பதிலாக பிரிவினை அரசியலில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மாநில வளர்ச்சிக்கும், மக்கள் பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக ஷர்மிளா தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA