Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூன் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், மே மாத ஊதியம் முறையாக வழங்கப்படாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மே மாதத்திற்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் வெளிநோயாளர் சிகிச்சை, தாய்-சேய் நல சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சேவைகளும் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam