Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 11 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட தொடர்பாக விளக்கம் அளித்த துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன்,
கோவில்பட்டி அருகே கயத்தார் வட்டம், தெற்கு மயிலோடை கிராமத்தைச் சேர்ந்தவர் அபிச்செல்வி. இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த ஹரி பிரசாத் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது அவரது வீட்டிற்கு தெரிந்து பிரச்சனை ஏற்பட்ட நிலையில், அபிச்செல்வி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.
இந்த பிரச்சனைக்கு பிறகு ஹரி பிரசாத், அபிச்செல்வியுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரி பிரசாத்தை இன்ஸ்டாகிராம் மூலம் அபிச்செல்வி தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் ஹரி பிரசாத் பதிலுக்கு தொடர்பு கொள்ளவில்லை.
இந்த நிலையில் அபிச்செல்வியின் செல்போன் பழுதாகி விட அதனை சரிபார்க்கச் சொல்லி தனது சகோதரர் சிவஞானத்திடம் கொடுத்துள்ளார். அப்போது ஹரி பிரசாத்திற்கு அபிச்செல்வி மெசேஜ் அனுப்பி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவஞானம், ’அவர் வேண்டாம் என்று ஒதுங்கி விட்ட நிலையில், நீ ஏன் மீண்டும் தொடர்பு கொள்கிறாய்’ என்று கேட்டு தனது சகோதரியை கண்டித்துள்ளார்.
அப்போது அபிச்செல்வி மற்றும் அவரது சகோதரர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்து, தனது சகோதரியை சிவஞானம் கட்டையால் தாக்கியுள்ளார்.
இதில் நிலை குலைந்த நிலையில் கிடந்த இளம்பெண் அபிச்செல்வியை, தாய் மற்றும் சகோதரர் சிவஞானம் ஆகிய இருவரும் சேர்ந்து மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டனர்.
இதல் அவர் உயிரிழந்துள்ளார். இதில் ஆணவக் கொலை எதுவும் இல்லை என்பது காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN