Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 11 ஜூன் (ஹி.ச.)
இயக்குநர் இமயம் என்றழைக்கப்படும் பாரதிராஜா (வயது 86) நேற்று (ஜூன் 10) காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.
இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா, நடிகர்கள் சூர்யா, கார்த்திக், சிவக்குமார், விஜய் சேதுபதி உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரமுகர்கள் கண்ணீர் மல்க பாரதிராஜாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, பாரதிராஜாவின் உடல் தேனி மாவட்டம், காட்ரோடு பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி திரையுலகினரும் பெருந்திரளாக பங்கேற்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மல்குமார், வன்னி அரசு ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச் சடங்கில் திரைப்பட இயக்குநர்கள் பாக்யராஜ், அமீர், பார்த்திபன், நடிகர் வடிவேலு, நடிகைகள், சின்னத்திரை நடிகர், நடிகைகள், கவிஞர் வைரமுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஊர் பொதுமக்கள் என
500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, காவல் துறையினரின் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் அவரது பண்ணை வீட்டு வளாகத்தில் இன்று மாலை 4:40 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, தேனி மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் பாரதிராஜாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Hindusthan Samachar / ANANDHAN