திமுகவின் திட்டத்திற்கு 'சிங்கப்பெண் காவல்துறை திட்டம்' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு
தூத்துக்குடி, 11 ஜூன் (ஹி.ச.) தூத்துக்குடியில் திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தற்போது தவெக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளதாக
திமுகவின் திட்டத்திற்கு 'சிங்கப்பெண் காவல்துறை திட்டம்' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு


தூத்துக்குடி, 11 ஜூன் (ஹி.ச.)

தூத்துக்குடியில் திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

தற்போது தவெக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 'சிங்கப்பெண் காவல்துறை திட்டம்' என்பது புதிய திட்டம் அல்ல. அது ஏற்கனவே திமுக ஆட்சிக் காலத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட திட்டமாகும்.

அதற்குத் தற்போதைய தவெக அரசு வெறும் ஸ்டிக்கர் ஒட்டி, புதிய திட்டம் போலப் புதுப்பித்து விளம்பரம் செய்து கொள்கிறது என்று சாடினார். பெண்களின் பாதுகாப்பு குறித்து மேடைகளில் பேசும் முதல்வர் விஜய், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள தனது சொந்தக் கட்சி ரசிகையின் வேதனைக்கு உரியப் பதில் சொல்வாரா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது முதல்வர் விஜய் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுப்பாரா?

தவெக தலைவர்கள் பேசும் தனிமனித ஒழுக்கத்திற்கும், அவர்களின் கட்சியினர் களத்தில் செயல்படுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

தவெகவினர் எங்குச் சென்றாலும் அவர்களின் மிரட்டல்களும், அடாவடிச் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தாங்கள் சொல்லும் ஆசிரியர்களுக்குத்தான் பள்ளிகளில் பணி வழங்க வேண்டும் என்று கூறிப் பல்வேறு கல்வி நிறுவனங்களை அவர்கள் நேரடியாக மிரட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மிரட்டி, தவெகவினர் தொடர்ச்சியாகப் பண வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாட்டிற்குத் தவெக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேடுகளே முதன்மைக் காரணம், தற்பொழுது ஊடகச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் 3 முக்கியத் தொலைக்காட்சி சேனல்களை இந்த அரசு முடக்கியுள்ளது.

மேலும், ஆதவ் அர்ச்சுனா தன் மீதுள்ள குற்றங்களை மறைப்பதற்காகவே தொடர்ந்து தேவையின்றிச் சவடால் பேசி வருகிறார் என்றும், தற்போதைய சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், பொறுப்புடனும் செயல்பட்டு வருகிறது.

என்று கீதா ஜீவன் தெரிவித்தார்.

பேட்டியின் போது, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் பகுதி செயலாளர்கள் ரவீந்திரன் நிர்மல்ராஜ் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கவிதா தேவி மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயகனி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, பிரதிநிதி பாஸ்கர் உள்பட அக்கட்சி நிவாகிகள் பலர் உடனிருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b