Enter your Email Address to subscribe to our newsletters

லண்டன், 12 ஜூன் (ஹி.ச.)
மகளிருக்கான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கடந்த 2009-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிமுகப்படுத்தியது.
இதுவரை 9 முறை இந்த தொடர் நடைபெற்றுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி 6 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில், 10-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றன.
போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் தலா 6 அணிகள் கொண்ட 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப்போட்டியில் மோதும். உலகின் முன்னணி மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி இந்த முறையாவது உலகக்கோப்பையை கைப்பற்றும் நோக்கில் களமிறங்குவதால், இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA