Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூன் (ஹி.ச)
அதிமுகவில் இருந்து யாரும் கூட்டம் கூட்டமாக வெளியேறவில்லை என்றும், பலனடைந்தவர்கள் மேலும் பலன் தேடி சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்த கருத்துகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கடுமையாக பதிலளித்தார்.
அவருடைய அரசியல் வரலாறு உங்களுக்கு தெரியுமா? அவர் எந்தெந்த கட்சிகளில் இருந்திருக்கிறார் என்பது தெரியுமா? அப்படி ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, என்று கே.பி.முனுசாமி கூறினார்.
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிர்வாகிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
யாரும் சாரை சாரையாகச் செல்லவில்லை. பலனடைந்தவர்கள் மேலும் பலன் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் கட்சியின் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றி, லட்சக்கணக்கான தொண்டர்கள் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையை ஏற்று சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர், என்றார்.
மேலும், சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டக் கழக நிர்வாகிகளையும் நேரில் அழைத்து, கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால பணிகள் குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகள் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்தை விட ஒரு வாக்கு கூட அதிகமாகப் பெறாது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியிருப்பது குறித்து மீண்டும் கேட்கப்பட்டபோது,
அவரது அரசியல் பின்னணியை சுட்டிக்காட்டிய கே.பி.முனுசாமி,
அவர் போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ