Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூன் (ஹி.ச.)
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
தொகுதி வாரியாக வாக்குப்பதிவு நிலவரம், பூத் கமிட்டிகளின் செயல்பாடு, தேர்தல் பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் வரவிருக்கும் தேர்தல்களுக்கான வியூகங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் கேட்டறிந்து வருகிறார்.
தோல்வியில் இருந்து பாடம் கற்று கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஆலோசனை நடைபெறுவதாக அதிமுக மூத்த தலைவர்கள் கூறினர்.
மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பொதுச் செயலாளரிடம் எடுத்துரைத்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b