Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 13 ஜூன் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் கடலில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் நான்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை, இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளரேஷன் கம்பெனி என்ற தனியார் நிறுவனம், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பம் அளித்துள்ளது.
இதற்கு அனுமதி அளிக்க கூடாது என இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க கூட்டு கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.
இதுகுறித்து கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது,
தமிழக அரசு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தின் பரங்கிப்பேட்டை உள்ளிட்ட ஐந்து வட்டங்கள் இந்த பாதுகாப்பு வேளாண் மண்டலத்தில் வருகிறது.
ஆனால் விதியை மீறி தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்தால், அப்பகுதியில் கடல் மாசுபாடு மற்றும் மீன்வளம் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் கிணறுகள் அமைத்தால் அப்போது ஏற்படும் நில அதிர்வு சோதனைகளால் தொடர் வெடி சத்தங்கள் மீன்களை பாதிக்கும், மேலும் கடலில் மீனவர்கள் படகுகளில் செல்ல முடியாத நிலைமை ஏற்படும்.
தமிழகத்தின் அலையாத்தி காடுகளில் ஒரு பகுதி அமைந்துள்ள பரங்கிப்பேட்டை பகுதியில் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அலையாத்தி காடுகள் முற்றிலும் அழிந்து போகும் நிலைமை உருவாகும். மீனவர்களின் வாழ்வாதாரம் இழந்து இப்பகுதியை வெளியேறக்கூடிய நிலைமை உருவாகும்.
இந்த ஒரு கம்பெனிக்கு அனுமதி அளித்தால் தொடர்ந்து ஒஎன்ஜிசி, வேதாந்தா போன்ற பெரு நிறுவனங்கள் அடுத்தடுத்து இப்பகுதியில் என்ன கிணறுகள் அமைக்க முன்வரும். கடற்கரையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும்.
ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு இந்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும், முந்தைய அரசுகள் போல் செயல்பட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு கடலில் எண்ணை துரப்பன அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கக் கூடாது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாதி மதம் கட்சி எல்லைகளை கடந்து அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து கூட்டு போராட்டங்கள் நடத்த திட்டமிட்டு வருகிறோம்
ஒரு போராட்ட சூழல் உருவாவதற்கு தமிழக அரசு இடம் கொடுக்காமல் பொதுமக்கள் நலத்தின் கருதி இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN