Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 ஜூன் (ஹி.ச)
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக ஒன்றிய நிர்வாகி மணிகண்டன் மீது பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டியதாகவும் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கடன் வாங்கித் தருவதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி தனது நண்பர்களின் பாலியல் இச்சைக்கும் பலியாக்கியதாக செய்திகள் வெளியாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறும் தமிழக அரசு மற்றும் தவெக தலைமையினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“மாற்று அரசியல்” என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த தவெக ஆட்சியில், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் கட்சியினரின் பெயர்கள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், இது கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ