Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
தலைமைச் செயலகத்திற்குள் நுழையும் அனைவரும் தீவிர பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டமன்றத்திற்கு வருவோர் உரிய அனுமதிச் சீட்டு வைத்திருப்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விசாரணைக் கைதிகளை காவல் நிலையங்களில் முன் அனுமதியின்றி தங்க வைக்கக் கூடாது என்றும், அவர்களை எந்த சூழ்நிலையிலும் துன்புறுத்தக் கூடாது என்றும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விசாரணை நடவடிக்கைகளை விரைவாக முடித்து, கைதிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என்றும், மதுபோதையிலோ அல்லது காயங்களுடனோ உள்ள விசாரணைக் கைதிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தவும், மனித உரிமை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P