Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 ஜூன் (ஹி.ச.)
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக குற்றம்சாட்டி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக வழக்கறிஞர் அதிசயா,
கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் சீமான் முதலமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் குறித்து மரியாதைக் குறைவாகவும் அவதூறாகவும் பேசியதாக தெரிவித்தார்.
கச்சத்தீவு தொடர்பான கேள்விக்கு அமைச்சர் “நோ கமெண்ட்ஸ்” என பதிலளித்ததை கிண்டல் செய்யும் வகையில் பேசியதுடன், அமைச்சரை ஒருமையில் விமர்சித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், முதலமைச்சரின் திரைப்பட வாழ்க்கை குறித்தும் தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டதாக தெரிவித்தார்.
தற்போதைய ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துகளை பதிவு செய்து வருவதாகவும், இதனை தடுக்கவே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிசயா கூறினார்.
புகார் மனு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ