Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம், 14 ஜூன் (ஹி.ச.)
அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது பாவங்கள் நீங்கி, குடும்பத்தில் சுபிட்சம் பெருகும் என்பது ஐதீகம்.
இதனை முன்னிட்டு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, புனித தலமான ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கடலில் புனித நீராடினர்.
அக்னி தீர்த்த கடற்கரையில் சிறப்பு மண்டபங்கள் அமைக்கப்பட்டு, வேத விற்பன்னர்கள் முன்னிலையில் பக்தர்கள் எள், தர்ப்பை புல், அரிசி கொண்டு தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
தர்ப்பணம் முடித்த கையோடு ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று 22 தீர்த்தங்களிலும் நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அமாவாசை வழிபாட்டை முடித்த பக்தர்கள், தனுஷ்கோடி மற்றும் பிற சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b