Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூன் (ஹி.ச)
வெளிநாடுகளில் உயர்கல்வி பயில விரும்பும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மாணவர்களின் கனவை சிதைக்கும் வகையில், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்திட்டத்தில் பல்வேறு நிர்வாகக் குளறுபடிகள் நிலவுவதாக திமுக மாணவர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பப் பதிவின் இறுதி தேதி நீட்டிக்கப்படாததால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களில் இருந்து சேர்க்கை ஒப்புதல் கடிதங்கள் தாமதமாக கிடைத்ததால் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், பழைய நிரந்தர சாதிச் சான்றிதழ்கள் ஏற்கப்படாமல் புதிய சான்றிதழ்கள் மட்டுமே ஏற்கப்படுவதால் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், கடவுச்சீட்டு கட்டாயமில்லை என இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதனை இல்லாமல் விண்ணப்பத்தை தொடர முடியாத தொழில்நுட்ப சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகள் குறித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சமூக நீதி அமைச்சகத்திற்கு மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தும், இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை என திமுக மாணவர் அணி கூறியுள்ளது.
மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த விவகாரத்தில் தமிழக அரசும் சமூக நீதி அமைச்சகமும் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ