Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூன் (ஹி.ச.)
சென்னை ஈசிஆர் உத்தண்டியில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்கள், நடனக் கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளை சந்தித்த ராகவா லாரன்ஸ்,
அரசியலுக்கு வருவது தொடர்பாக விரைவில் நல்ல முடிவை அறிவிக்க உள்ளதாக கூறினார்.
முன்னதாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட காணொளியில்,
அரசியலுக்கு வரலாமா என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டிருந்தார். இதற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் அவரது இல்லத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
ராகவேந்திரர் கோவிலில் வழிபாடு செய்த பின்னர் ரசிகர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ்,
நீங்கள் நினைப்பது விரைவில் நடக்கும். அரசியலுக்கு வரலாமா என்று உங்களிடம் கேட்டபோது, வாருங்கள் என அழைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.
ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன்.
விரைவில் எனது தாயாரை மேடையில் அமர வைத்து ரசிகர்கள் முன்னிலையில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதால் தான் மக்களிடம் கருத்து கேட்டேன். சமூக வலைதளங்களில் வந்த அனைத்து கருத்துகளையும் படித்தேன். குறிப்பாக இளைஞர்கள் அரசியலுக்கு வருமாறு வலியுறுத்தினர்” என்றார்.
தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
கடந்த ஒரு மாதமாக அரசின் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன். நன்றாக உள்ளது. குறிப்பாக கோவில்கள் மற்றும் பள்ளிகள் அருகே உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. பள்ளிக்கல்வித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்களின் செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளன என்றார்.
மேலும், புதிய அரசுக்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். நாம் மாற்றத்தை விரும்பினோம், அது நடந்துள்ளது. ஒரு வீட்டிற்குள் சென்ற பிறகுதான் அதன் பிரச்சினைகள் என்ன என்பது தெரியும். அதுபோல ஒரு மாநிலத்தின் நிர்வாக பொறுப்பை ஏற்ற பிறகுதான் சவால்கள் புரியும். எனவே அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் விஜயை விமர்சிப்பது குறித்து பேசிய அவர்,
விஜய் மீதான பொறாமை காரணமாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. விமர்சனம் செய்வதற்கு முன்பு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார்.
தவெகவுடன் இணைய உள்ளீர்களா என்ற கேள்விக்கு,
சில தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
அது சஸ்பென்ஸ் என்று பதிலளித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து கேட்கப்பட்டபோது,
அவரது ஆசீர்வாதத்துடனேயே அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறேன். அவர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார் என்றார்.
அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கியது குறித்து கேட்கப்பட்டபோது,
அண்ணாமலை மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று கூறினார்.
விஜய் ரசிகர்களை தற்குறி என விமர்சிப்பது குறித்து பேசிய அவர்,
விஜய் ரசிகர்கள் தற்குறி அல்ல. அவர்கள் ஷார்ப் ஆன அம்புக்குறி என்றார்.
மேலும், “
நான் அரசியலுக்கு சண்டை போடவோ, வெறுப்பு அரசியல் செய்யவோ வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வர விரும்புகிறேன். தற்போது சில மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறேன்.
அரசியலுக்கு வந்தால் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவ முடியும். பதவி மற்றும் பணம் மீது எனக்கு ஆசை இல்லை.
மக்களுக்கு நல்லது செய்வதே என் நோக்கம் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ