Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 14 ஜூன் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (32) என்பவர், வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குற்றச்சாட்டு தொடர்பான ஆரம்பகட்ட ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் மற்றொரு சம்பவம் ரத்தினகிரி அருகே உள்ள கீழ்மின்னல் பகுதியில் நடைபெற்றுள்ளது.
அப்பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ராஜேஷ் (43) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ரத்தினகிரி காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதுடன், சம்பவம் தொடர்பான தகவல்களையும் சேகரித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN