குடும்ப தகராறில் கால் தவறி கிணற்றில் விழுந்த பள்ளி மாணவி உயிரிழப்பு
அவிநாசி, 14 ஜூன் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அ.குரும்பபாளையம் செட்டிகாடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (45) பனியன் தொழிலாளி ஆவார். ரவிச்சந்திரன் அவரது மனைவி மாலதி செல்வி (40) மற்றும் சந்தியா மற்றும் ரித்திகா என இரு
குடும்ப தகராறில் கால் தவறி கிணற்றில் விழுந்த பள்ளி மாணவி உயிரிழப்பு


அவிநாசி, 14 ஜூன் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அ.குரும்பபாளையம் செட்டிகாடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (45) பனியன் தொழிலாளி ஆவார். ரவிச்சந்திரன் அவரது மனைவி மாலதி செல்வி (40) மற்றும் சந்தியா மற்றும் ரித்திகா என இரு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.

இவர்களது இளைய மகள் ரித்திகா(17), அவிநாசியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளாக மதுபழக்கத்தை கைவிட்ட ரித்திகாவின் தந்தை ரவிச்சந்திரன், நேற்று இரவு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ரவிச்சந்திரன் கிணற்றில் விழுந்து சாகிறேன் என கூறிக் கொண்டே வீட்டிற்கு அருகாமையில் 100 அடி ஆழத்தில் தண்ணீர் இல்லாமல் பயனற்று கிடந்த கிணற்று அருகில் வேகமாக சென்றுள்ளார்.

அப்போது, உடன் இருந்த மூத்த மகள் சந்தியா, இளைய மகள் ரித்திகா மனைவி மாலதிசெல்வி ஆகியோர் ரவிச்சந்திரனை தடுக்க முயன்றுள்ளனர். இதில் இளைய மகள் ரித்திகா எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.

உடனடியாக ரித்திகாவின் பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவிநாசி தீயணைப்பு மீட்பு பணிகள் குழு மற்றும் சேவூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு குழுவினர், கிணற்றுக்குள் இறங்கி நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு உயிரிழந்த நிலையில் ரித்திகாவை மீட்டுனர்.

இதையடுத்து, ரித்திகாவின் உடல் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தந்தையை காப்பாற்ற சென்ற மகள், கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / vidya.b