Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூன் (ஹி.ச)
சென்னை தி.நகர் மேம்பாலத்தில் சென்ற கார் ஒன்றின் டயர் திடீரென வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த திவ்யா கிருஷ்ணா என்ற பெண், தனது காரில் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தி.நகர் மேம்பாலத்தில் கார் சென்றபோது எதிர்பாராத விதமாக முன்பக்க டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் காரின் கட்டுப்பாட்டை இழந்த அவர், வாகனத்தை சமாளிக்க முயன்றும் முடியாமல் சென்டர் மீடியனில் கார் மோதி நின்றது.
விபத்து ஏற்பட்டதும் அப்பகுதியில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள், விபத்துக்குள்ளான காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், காரில் இருந்த திவ்யா கிருஷ்ணா லேசான அதிர்ச்சியுடன் உயிர்தப்பியதாகவும் கூறப்படுகிறது.
விபத்திற்கான காரணம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டயர் வெடிப்பால் விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு இருந்ததா என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ