Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 15 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் இந்தியாவில் காணப்படாத வகையில் முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசின் தோல்விகள் மற்றும் ஊழல் விவகாரங்களை தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால் பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு அரசியல் கட்சிக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரான தாக்குதலாகும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கப்பட்டதாகவும், தற்போது ஃபேஸ்புக் பக்கமும் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமராவதி தலைநகர் திட்ட செலவுகள், டிஎஸ்சி ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் முறைகேடுகள் மற்றும் திருப்பதி தேவஸ்தான நெய் டெண்டர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பி வருவதால் அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஜெகன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஃபேஸ்புக் பக்கத்தை உடனடியாக மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதுதொடர்பாக சட்ட ரீதியாகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலும் போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மிரட்டல்கள் மற்றும் தணிக்கை நடவடிக்கைகள் மூலம் தங்களது குரலை அடக்க முடியாது என்றும், மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA