Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 15 ஜூன் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளது மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகிய கோவிந்தசாமி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்
அவரது இந்த முடிவு அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திடீரென அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சூழ்நிலை காரணமாக அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன்.
ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் எனது மனமும் உடலும் ஒத்துழைக்காத காரணத்தால் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறேன். இனி எந்த அரசியல் இயக்கத்திலும் நான் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை தனக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, இனி பொதுமக்களோடு பொதுமக்களாக இருந்து சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சில நாட்களிலேயே முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது தருமபுரி மாவட்ட அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P