Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 15 ஜூன் (ஹி.ச.)
தமிழக - கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனைச்சாவடியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ராஜிவ் நேற்று நள்ளிரவு திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த திடீர் ஆய்வின் போது,
கேரள மாநிலத்திற்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை, அவற்றின் எடை அளவு மற்றும் உரிய அனுமதிச் சீட்டுகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார்.
மேலும், சோதனைச்சாவடியில் பராமரிக்கப்படும் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள லாரிகளின் எண்ணிக்கை மற்றும் அவை கடந்து சென்ற நேரம் குறித்த பதிவுகளையும் நள்ளிரவில் அவர் தீவிரமாக ஆய்வு செய்தார்.
எல்லை வழியாக கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும், முறையான அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்கவும் இந்த திடீர் ஆய்வு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புளியரை பகுதியில் கனிம வளங்கள் அண்டை மாநிலமான கேரளத்துக்கு தொடர்ந்து கடத்தப்படுவதை தடுக்கக்கோரி இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அமைச்சரின் இந்த நள்ளிரவு ஆய்வு, சோதனைச்சாவடி பணியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து முறைகேடுகளைத் தடுக்க இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஆய்வின்போது எச்சரிக்கை விடுத்தார்.
Hindusthan Samachar / vidya.b