Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 ஜூன் (ஹி.ச.)
நீட் தேர்வு முறைகேடு, வேலைவாய்ப்பின்மை, உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மாணவர்களின் கருத்துகளை நேரடியாக அறியும் வகையில், நாடு முழுவதும்
டவுன்ஹால் (Town Hall) சந்திப்புகளை நடத்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புகளில் கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான சவால்கள் குறித்து நேரடியாக கேட்டு அறிய ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகள், அரசுப் பணியாளர் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இளைஞர்களின் கருத்துகளை சேகரித்து, அவற்றை நாடாளுமன்றத்திலும் அரசியல் அரங்கிலும் வலுவாக முன்வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகள் பல்வேறு மாநிலங்களில் கட்டம் கட்டமாக நடத்தப்பட உள்ளதாகவும், விரைவில் அதற்கான அட்டவணை வெளியிடப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் நேரடி தொடர்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P