Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் நான்கு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சி கவலை அளிப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின்போது, வேளாண் மக்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலின் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த வகையிலான ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்படாது என்ற உறுதியான நிலைப்பாடு கடைப்பிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ONGC நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் இருப்பு தொடர்பான ஆய்வுக்கு விண்ணப்பித்தபோது, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமான SEIAA மூலம் அந்த முயற்சியை தொடக்க நிலையிலேயே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கும் புதிய அரசு தனது எதிர்ப்பைத் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்றும், இயற்கை வளங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இத்திட்டத்திற்கு எந்தவித சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கக்கூடாது என மாநில அரசு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துவதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ