Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 15 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி
சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த வடமாநில தொழிலாளர்களின் 3 வயது குழந்தை காணாமல் போன நிலையில், பெற்றோரும் அப்பகுதி மக்களும் தேடியுள்ளனர்.
அப்போது அருகிலுள்ள முட்புதரில் உடல்நலக்குறைவுடன் குழந்தை கிடந்ததை பெண்கள் சிலர் கண்டுபிடித்து மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சி (19) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, குழந்தை மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடைபெற்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், கைது செய்யப்பட்ட நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் உறுதியளித்தனர்.
இதையடுத்து நள்ளிரவு வரை நீடித்த போராட்டம் கைவிடப்பட்டது.
3 வயது குழந்தை தொடர்பான இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam