Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி அவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று கடந்த 2021ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் கேங்மேன் பணியில் சேர்ந்த பணியாளர்கள், பின்னர் கள உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், பல மாதங்கள் கடந்தும் அது நடைமுறைக்கு வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, கேங்மேன் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு மின்வாரியத்தில் நீண்ட காலமாக காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ள நிலையில், அந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் போது கேங்மேன் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, ஒப்பந்த அடிப்படையில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி வரும் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமித்து, தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும் தமிழக அரசும் மின்வாரியமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ