Enter your Email Address to subscribe to our newsletters

பெலாரஸ், 16 ஜூன் (ஹி.ச)
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அன்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அது முதல் இதுநாள் வரையில் ஏவுகணைகள், ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இதுவரையிலான மோதலில் உக்ரைனின் 5 பிராந்தியங்களை ரஷ்யா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
இருதரப்பிலும் மக்களின் உயிரிழப்புகள், தளவாடங்கள் இழப்பு ஏற்பட்ட சூழலிலும் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி முதல் உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் அதிகாரிகள் மோதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் இடையே நீடித்துவரும் மோதலை முடிவுக்கு கொண்டுவர அமைதியான சமரசம் அவசியம் என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, அவர் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
போர்க்களத்தில் இரு தரப்புக்கும் தெளிவான வெற்றி கிடைப்பது சாத்தியமில்லை என்பதை சுட்டிக்காட்டி, சமரசத்தின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
அமெரிக்க மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ள நிலையில், ராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை பெலாரஸ் தலைவர் வலியுறுத்தினார்.
உக்ரைனில் பெலாரஸ் படைகளை நிறுத்தப்போவதில்லை என்று கூறிய அவர், தேவைப்பட்டால் ரஷ்யாவும் பெலாரசும் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் என உறுதியளித்தார்.
ரஷ்யா படிப்படியாக முன்னேறிவருவதாகவும், உக்ரைன் தற்காப்பு நிலையில் இருப்பதாகவும், இரு தரப்பும் கடுமையான படைவீரர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகும் சூழலில் லுகாஷென்கோவின் கருத்துகள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் பெலாரசிடமிருந்து அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை என்றும், பதற்றங்களுக்கு அரசியல் நோக்கங்களே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / vidya.b