Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 16 ஜூன் (ஹி.ச)
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை எட்ட முடியாததைத் தொடர்ந்து, திமுக தலைமை மேற்கொண்ட விரிவான கள ஆய்வின் அறிக்கை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் தொடர்ந்து ஆறாவது நாளாக சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, தோல்விக்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிய மாவட்ட வாரியாக மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து கட்சித் தலைமை கள ஆய்வுக்கு உத்தரவிட்டிருந்தது.
அந்தக் குழுக்கள் தொகுதி வாரியாக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர், பொதுமக்கள் ஆகியோரிடம் நேரடியாகக் கருத்துகளைக் கேட்டறிந்தன.
வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணங்கள், பிரச்சார உத்திகளில் இருந்த குறைபாடுகள், உள்கட்சிப் பூசல்கள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்த கள ஆய்வின் மூலம் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள், கடந்த ஐந்து நாட்களாக அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலினிடம் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன.
ஆறாவது நாளான இன்றும் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்கள் பகுதிக்கான அறிக்கையை சமர்ப்பித்தனர்.
ஒவ்வொரு அறிக்கையையும் கவனமாகப் பரிசீலித்து வரும் ஸ்டாலின், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் கூடுதல் விளக்கங்களையும் கேட்டறிந்து வருகிறார்.
அறிக்கைகள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், கட்சியின் உயர்மட்டக் குழு கூடி விரிவாக விவாதிக்க உள்ளது.
இதன் அடிப்படையில் கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள், எதிர்கால தேர்தல் வியூகங்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தலைமைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தோல்வியில் இருந்து பாடம் கற்று, அடுத்து வரும் தேர்தல்களை வலுவாக எதிர்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமையும் என கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b