Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 16 ஜூன் (ஹி.ச.)
கருமுத்து தியாகராஜன் செட்டியார் தமிழ்நாட்டில் கல்வி, தொழில் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு ஆற்றிய பெரும் பங்களிப்பிற்காக கலைத்தந்தை என்று போற்றப்படும் ஒரு புகழ்பெற்ற தொழிலதிபரும், பரோபகாரரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
கலைத்தந்தை என்று போற்றப்பட்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1893ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார்.
இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார்.
இவர் இலங்கையின் மலையக தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிக்கை ஒன்றையும் தொடங்கி நடத்தினார்.
இந்தியா திரும்பிய தியாகராஜன் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார்.
நூல் ஆலையும், நெசவு ஆலையும் அமைத்தார். தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி இன்றியமையாதது என்பதை உணர்ந்து, ஏழை எளிய மாணவர்களும் பயன்பெறும் வகையில் 19 கல்வி நிறுவனங்களை நிறுவினார்.
இவர் தமிழ்மீது தனி ஆர்வம் காட்டி வந்தார்.
இளம் வயதிலேயே புத்தகம் படிப்பதிலும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.
இதன் காரணமாக தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழை பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.
கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்டவரான கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1974ஆம் ஆண்டு மறைந்தார்.
Hindusthan Samachar / Durai.J