Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் ஆதரவு அளிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் - திமுக இடையேயான விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை துரோகம் என விமர்சித்த திமுக, இது கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தைப் புறக்கணித்தது.
இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் முதிர்ச்சியின்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஆகியவை இந்தியா கூட்டணிக்குள் அதிகரித்து வரும் அதிருப்திக்கு முக்கிய காரணங்கள் என திமுக குற்றம்சாட்டியுள்ளது.
திமுகவின் அதிகாரபூர்வ நாளேடில் வெளியான கட்டுரையில், தேசிய நாடாளுமன்றத் தேர்தல்களின் போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் நாடுவதாகவும், அதே வேளையில் மாநில சட்டமன்றத் தேர்தல்களின்போது அவற்றை பலவீனப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க காங்கிரஸ் அனைத்தையும் செய்கிறது.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது, பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்காக அவர்களின் ஆதரவை நாடுகிறது என்று திமுகவின் அதிகாரபூர்வ நாளேடு தெரிவித்துள்ளது.
ஜூன் 8-ஆம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில், கூட்டணி உறவுகளை காங்கிரஸ் கையாளும் விதம் குறித்து பல மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்ததாகவும் இந்த விமர்சனத்தை ராகுல் காந்தி எதிர்பார்க்கவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சி ஒற்றுமை குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியே விமர்சனத்தின் முதன்மை இலக்காக மாறியது.
அதற்கு ராகுல் காந்தியின் அரசியல் முதிர்ச்சியின்மையும், நேர்மையின்மையுமே காரணம் என்றும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது.
திமுகவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரள சட்டமன்றத் தேர்தலின்போது தனது தலைமைக்கு எதிராக நடத்தப்பட்ட முறையான பிரச்சாரம் குறித்து காங்கிரசிடம் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b