Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 17 ஜூன் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆகாஷ் என்ற இளைஞர் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சுமார் 120 நாட்களுக்கு மேலாக அவரது உடல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பான வழக்குகளின் அடிப்படையில் காவல்துறை தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஆகாஷின் உடலை உடனடியாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி விக்டோரியா உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆகாஷின் உடலை இன்று அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை செய்தது.
ராஜாஜி மருத்துவமனை தலைமை நிலைய மருத்துவ அதிகாரி சரவணன் தலைமையில் வருவாய்க் கோட்டாட்சியர் கருணாகரன், வீடியோ பதிவு செய்த குழுவினர் ஆகாஷின் உடலை வெளியே எடுத்து அடக்கம் செய்ய முயன்று வருகின்றனர்.
இந்தநிலையில் தங்களுடைய மகனின் உடலை அடக்கம் செய்யக்கூடாது. நாங்கள் இந்த வழக்கில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளோம்.
அந்த மனு விசாரணைக்கு வரும் வரையில் அடக்கம் செய்ய விட மாட்டோம் எனக் கூறி பெற்றோர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b