அம்மா உணவக இட்லி மொத்த விற்பனையா? -பொதுமக்களுக்கு கிடைக்காததால் கோவில்பட்டியில் பரபரப்பு
கோவில்பட்டி, 17 ஜூன் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். கோவில்பட்டி நகராட்சி அம்மா உணவகத்தில் நாள்தோறும் கட்டிடத் த
அம்மா


கோவில்பட்டி, 17 ஜூன் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

கோவில்பட்டி நகராட்சி அம்மா உணவகத்தில் நாள்தோறும் கட்டிடத் தொழிலாளர்கள், முதியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வெளியூரில் இருந்து வந்து தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குறைந்த விலையில் உணவருந்தி வருகின்றனர். இங்கு தினமும் காலை சுமார் 1,200 இட்லிகள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

காலை 7 மணியளவில் விற்பனை தொடங்கும் நிலையில், அரை மணி நேரத்திலேயே இட்லி விற்பனை முடிந்துவிட்டதாக ஊழியர்கள் தெரிவிப்பதாகவும், இதனால் உணவகத்திற்கு நேரடியாக சாப்பிட வருபவர்களுக்கு இட்லி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சில சிறிய ஹோட்டல் உரிமையாளர்களுக்கு 60, 80 இட்லிகள் என மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட பின்னரே, பொதுமக்களிடம் இட்லி தீர்ந்துவிட்டதாக கூறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அம்மா உணவகங்களில் பார்சல் வழங்கக்கூடாது என்பது நடைமுறையில் உள்ள விதிமுறையாக இருந்தபோதிலும், அதனை மீறி பார்சல்கள் வழங்கப்படுவதாகவும், பிளாஸ்டிக் கவர்களில் இட்லி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டபோது,

அதிகாரிகள் கூறியபடியே செயல்படுகிறோம் என பதிலளித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், செய்தியாளர்கள் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தபோது,

நகராட்சி ஊழியர் ஒருவர் அங்கு பணியாற்றும் பெண்களிடம், பார்சல் வழங்கக் கூடாது என்று அதிகாரிகள் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளனர்.

மீண்டும் மீண்டும் வழங்க வேண்டாம் என எச்சரித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக உணவகத்திற்கு நேரடியாக வருபவர்களுக்கு போதுமான அளவில் இட்லி கிடைத்த நிலையில், சமீப காலமாக மொத்த விற்பனை அதிகரித்ததாலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு ரூபாய்க்கு வாங்கப்படும் இட்லிகள் வெளியில் அதிக விலைக்கு மறுவிற்பனை செய்யப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, கோவில்பட்டி நகராட்சி அதிகாரிகள் சம்பவம் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, உண்மைத்தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P