Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)
முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
அதிமுக பொதுக்குழுவில் ஓ. பன்னீர்செல்வம், ஆர். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் வெளியேற்றப்பட்டபோதே, ஒற்றைத் தலைமையை நோக்கிய நடவடிக்கைகள் குறித்து தான் எச்சரித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்றும், கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது இலக்கு என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தனது அரசியல் வாரிசாக மகனை முன்னிறுத்தும் முயற்சியில் அவர் இருப்பதாகவும் கே.சி. பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் தற்போது முன்வைக்கும் கருத்துகள், தாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூறியவையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் “மிதுன் பொதுச்செயலாளர்” என்ற கோஷம் எழுப்புவதற்கான முன்னோட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும், அதிமுகவின் அடிப்படை கொள்கைகள் மற்றும் தலைவர்களின் பாரம்பரியம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கே.சி. பழனிசாமி தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ