மாம்பழ விலை கடும் வீழ்ச்சி- அறுவடை செய்த பழங்களை குப்பையில் கொட்டும் அவலம்
திண்டுக்கல், 17 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் சேலத்திற்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அல்போன்சா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த் உள்ளிட்ட உயர்தர ரகங்களும், செந்தூரம், மல்கோவா போன்ற நாட்டு ரகங்களு
மாம்பழம்


திண்டுக்கல், 17 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் சேலத்திற்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அல்போன்சா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த் உள்ளிட்ட உயர்தர ரகங்களும், செந்தூரம், மல்கோவா போன்ற நாட்டு ரகங்களும் இப்பகுதியில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இங்கிருந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, வத்தலக்குண்டு, பரளி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாம்பழ சாகுபடி செய்யப்பட்டு இந்த ஆண்டு அதிகளவில் விளைச்சல் கிடைத்துள்ளது.

ஆனால் உற்பத்தி அதிகரித்த நிலையில், வெளிமாநில கொள்முதல் குறைந்ததோடு, சர்வதேச சூழ்நிலைகள் மற்றும் போர் பதற்றம் காரணமாக வெளிநாட்டு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஒரு கிலோ மாம்பழம் ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையான நிலையில், இந்த ஆண்டு விலை படிப்படியாக சரிந்து வந்தது.

கடந்த வாரம் வரை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையான மாம்பழங்கள் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை மட்டுமே விலை பெறுகின்றன.

சில இடங்களில் ரூ.5-க்கும் குறைவாகவே விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

உற்பத்தி செலவைக் கூட ஈடுகட்ட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதால், அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்களை சந்தைக்கு கொண்டு செல்லாமல் டிராக்டர்களில் ஏற்றி குப்பை மேடுகளில் கொட்டி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P