Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி , 17 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாதம் தோறும் 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த மாதத்திற்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் 19.06.2026 (வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணிக்குக் கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த வேலைவாய்ப்பு முகாமில் தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணித் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree), பி.இ (B.E), டிப்ளமோ (Diploma), ஐ.டி.ஐ (ITI), கனரக/இலகுரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் கணினிப் பயிற்சி (Computer training) முடித்த தகுதியுடைய வேலைநாடுநர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான இளைஞர்கள் தங்களது சுயவிபரக் குறிப்பு (Biodata) மற்றும் அசல் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்றுப் பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு (Seniority) எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. அது தொடர்ந்து நடைமுறையிலேயே இருக்கும்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் (Employers) மற்றும் வேலைநாடுநர்கள் (Job seekers) அனைவரும் தங்களது விபரங்களை முன்கூட்டியே www.tnprivatejobs.tn.gov.in என்ற அரசு இணையதளப் பக்கத்தில் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும்.
மேலும், இந்த முகாம் தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் உடனுக்குடனான தகவல்களைத் தெரிந்துகொள்ள 'THOOTHUKUDI EMPLOYMENT OFFICE' என்ற அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலில் (Telegram Channel) இணைந்தும் இளைஞர்கள் பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b