Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜூன் (ஹி.ச.)
அம்மா உணவகங்களில் உணவுகளை மொத்தமாக வாங்கி வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் முறைகேடுகளைத் தடுக்க சென்னை மாநகராட்சி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இதன்படி, அம்மா உணவகங்களில் 50 முதல் 100 உணவுகள் வரை மொத்தமாக பார்சல் வாங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அளவுக்கு அதிகமாக பார்சல்கள் வழங்கும் ஊழியர்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவையெனில் பணிநீக்கமும் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு வழங்குவதற்காக தன்னார்வ அமைப்புகள் (NGO-க்கள்) மொத்தமாக உணவு வாங்குவதற்கும் தற்போது தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக சிறிய அளவில் உணவுகளை பார்சலாக வாங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று மாநகராட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
அம்மா உணவகங்களின் முதன்மை நோக்கம் குறைந்த விலையில் உணவு தேவைப்படும் பொதுமக்களுக்கு சேவை வழங்குவதாகும்.
எனவே, உணவகங்களில் அமர்ந்து உணவருந்தும் வாடிக்கையாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam