Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 18 ஜூன் (ஹி.ச)
தமிழர் நலனைப் பாதுகாக்கும், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டும் திராவிட இயக்க அரசியல் மரபை பின்பற்றியுள்ள ஆளுநர் உரையை முழு மனதுடன் வரவேற்பதாக மறுமலர்ச்சி திமுகவின் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் தனித்துவமான இருமொழிக் கொள்கை, மாநில உரிமைகள் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றில் அரசின் உறுதிப்பாடு ஆளுநர் உரையில் தெளிவாக வெளிப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், மாநிலத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ எதிர்க்கும் உறுதியான நிலைப்பாடு, வரலாறு காணாத நிதிப் பற்றாக்குறை நிலவினாலும் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தும் முனைப்பு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் உறுதி ஆகியவை வரவேற்கத்தக்கவை என தெரிவித்துள்ளார்.
கனிமவளங்களை முறைப்படுத்தி அரசின் வருவாயை இரட்டிப்பாக்கும் திட்டம், அனைவரையும் உள்ளடக்கிய சமூகநீதிப் பாதை மற்றும் மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க ஒன்றிய அரசை நட்புணர்வுடன் அணுகும் அணுகுமுறை ஆகிய அம்சங்களும் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருப்பது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலன் மற்றும் மாநில உரிமைகளை முன்னிறுத்தியுள்ள இன்றைய ஆளுநர் உரையை முழுமையாக வரவேற்பதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ