Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 18 ஜூன் (ஹி.ச.)
நேர்மையை தனது உயிராகவும் தேசபக்தியும் தெய்வபக்தியும் தனது வாழ்வாகவும் கருதி வாழ்ந்த எளிய மனிதர் விடுதலை போராட்ட வீரர் தியாகி கக்கன் ஐயா அவர்களின் 118-வது பிறந்தநாள் இன்று
கிராமக்கோயில் பூசாரியின் மகனாக பிறந்து தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக உழைத்தவர்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்பட பல போராட்டங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக கலந்துகொண்டு சிறை சென்றவர்.
இவர் மாநில உள்துறை அமைச்சராக இருந்தபோது தான் இந்தி திணிப்பு போராட்டம் நடந்தது.
கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை, வீடூர் அணைகள் கட்டப்பட்டன.
ஆதி திராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது.
அவர் விவசாய அமைச்சராகப் பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட்டது.
1940-ல் மதுரை மேலூர் வட்டார காங்கிரஸ் செயலாளரானார்.
அது தான் காங்கிரஸில் அவர் வகித்த முதல் பதவி.
அப்போது காந்தி அறிவித்த போராட்டம் ஒன்றில் பங்கேற்ற கக்கன், பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார்.
முதல் சிறைவாசம் அதுதான்.
அதன் பிறகு, போராட்டங்களும் சிறைவாசங்களும் தொடர்ந்தன.
வட்டார காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கன், மதுரை மாவட்டப் பொருளாளரானார்.
அரசியல்ரீதியாக சமூக மாற்றங்களைக் கொண்டுவந்த மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் பிரவேசத்தை வைத்தியநாதய்யர் நடத்தியபோது, அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார் கக்கன்.
1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீஸாரின் கண்ணில் சிக்காமல் தப்பிக்கத் தலைமறைவாக இயங்கினார் கக்கன்.
ஒருகட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.
தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தைப் பற்றிய முழு அம்சங்களும் கக்கனுக்குத் தெரியுமென்பதால், தலைமறைவாக உள்ள மற்ற தலைவர்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லுமாறு சித்திரவதை செய்தனர் காவலர்கள்.
ஆனால், கக்கனிடமிருந்து ஒரு துப்புகூடக் கிடைக்கவில்லை. ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷ் அரசு, கக்கனை அலிப்பூர் சிறைக்கு அனுப்பிவைத்தது.
18 மாதங்களுக்குக் கொடும் சிறைவாசம் அனுபவித்தார்.
Hindusthan Samachar / Durai.J