அமெரிக்க, ஐரோப்பிய தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் அமைதி பேச்சுவார்த்தை - கீவ் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைன், 18 ஜூன் (ஹி.ச.) உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் பேசிய சில மணி நேரங்களில், ரஷ்யா இன்று கீவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க, ஐரோப்பிய தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் அமைதி பேச்சுவார்த்தை - கீவ் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்


உக்ரைன், 18 ஜூன் (ஹி.ச.)

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் பேசிய சில மணி நேரங்களில், ரஷ்யா இன்று கீவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியில் ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக அந்நகர அதிகாரிகள் கூறினர். உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எதிரி தலைநகர் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்துகிறது. வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை முடியும் வரை பாதுகாப்பான இடங்களில் இருங்கள் என்று கீவ் ராணுவ நிர்வாகத் தலைவர் டைமூர் ட்காசென்கோ இன்று அதிகாலை டெலிகிராம் பதிவில் கூறினார்.

பிரான்சில், ஜி7 கூட்டத்தில் கலந்து கொண்ட பிற தலைவர்களைச் சந்தித்த பிறகு, ட்ரம்ப் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் பேசியதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உக்ரைன் மீதான ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக இது ஒரு ஒருங்கிணைப்பு உரையாடல் என்று அவர் விவரித்தார்.

கீவ் மீதான இந்தத் தாக்குதல் இந்த வாரம் ரஷ்யா நடத்தும் இரண்டாவது வான்வழித் தாக்குதலாகும்.

திங்களன்று ரஷ்யா நடத்திய பெரும் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் ஆன்மிக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் 1,000 ஆண்டுகள் பழமையான மடாலயம் கடுமையாக சேதமடைந்தது. இந்தத் தாக்குதலுக்கு ஐரோப்பிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ரஷ்யா, உக்ரைனை விட அதிகமான வீரர்களை இழந்து வருவதாக நேற்று ட்ரம்ப் கூறினார். போர் குறித்து ஏதாவது செய்ய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் ஜெலென்ஸ்கியும் தயாராக இருப்பதாகத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ட்ரம்புடன் நடந்த சமீபத்திய தொலைபேசி உரையாடலின் போது, ஜெலென்ஸ்கியுடன் சந்திப்பு நடத்துவதற்கான சாத்தியம் குறித்து புடின் விவாதிக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

உக்ரைன்தான் அதிக இழப்புகளை சந்திப்பதாக ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.

Hindusthan Samachar / vidya.b