Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 19 ஜூன் (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று அறிஞர் அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது.
கூட்ட அரங்கில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கூட்டத்திற்கு வந்த திமுக மாமன்ற உறுப்பினர்கள் முன்னாள் முதலமைச்சர்களான மு. க. ஸ்டாலின் மற்றும் கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்களை கொண்டு வந்து அரங்கில் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு போட்டியாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தையும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் குமரகுருநாதன், பெருந்தலைவர் காமராஜர் புகைப்படத்தையும் அரங்கில் வைத்ததாக கூறப்படுகிறது.
தற்போதைய முதலமைச்சரின் புகைப்படம் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்களை அரங்கில் வைத்த சம்பவம் மாமன்ற கூட்டத்தில் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால் கூட்ட அரங்கில் சில நேரம் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், பின்னர் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கூட்டம் வழக்கம்போல் நடைபெற்றது.
Hindusthan Samachar / GOKILA arumugam