செயல்திறன் மிக்க ஆலோசனைக் குழுவை அமைக்க அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை, 19 ஜூன் (ஹி.ச.) தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன். இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக
Annamalai


சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)

தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்,

தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.

இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.

• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.

• தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.

• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது.

• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.

• நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும்.

எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN