தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளில் புதிய கட்சி குறித்து அறிவிப்பு - தொண்டர்கள் ஆர்வம்
தூத்துக்குடி, 02 ஜூன் (ஹி.ச.) கடந்த 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த முன்னாள் எஸ்பி அதிகாரியான அண்ணாமலை குறுகிய கால கட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவராக உயர்ந்தார். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளில் புதிய கட்சி குறித்து அறிவிப்பு? - தொண்டர்கள் ஆர்வம்


தூத்துக்குடி, 02 ஜூன் (ஹி.ச.)

கடந்த 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த முன்னாள் எஸ்பி அதிகாரியான அண்ணாமலை குறுகிய கால கட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவராக உயர்ந்தார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார். ஆனால் அந்த தேர்தலில் பாஜக கடுமையான தோல்வியைச் சந்தித்தது.

தலைவராக அண்ணாமலை இருந்தபோது நாடாளுமன்றத் தேர்தலில் 11 சதவீதமாக இருந்த கட்சியின் வாக்கு வங்கி, தற்போது 2 சதவீதமாகக் குறைந்துள்ளதை அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கல்விக் கொள்கையை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்தும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக அண்ணாமலை அண்மையில் அறிக்கை வெளியிட்டார்.

மத்திய அரசின் திட்டங்களை எப்போதும் ஆதரித்து வந்த அவர், முதன்முறையாக எதிர்ப்புக் குரல் எழுப்பியது தனிக்கட்சித் தொடக்கத்திற்கான அறிகுறி என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

நேற்று மாலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த அண்ணாமலையின் காரில் பாஜக கட்சியின் கொடி கட்டப்படவில்லை.

இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,

ஓரிரு நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், எல்லாவற்றையும் சொல்கிறேன்.

இரண்டு நாட்கள் கழித்து அமர்ந்து பேசுவோம் என்று கூறிவிட்டுச் சென்றார்.

டெல்லி சென்றுள்ள அவர், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ஜூன் 4ஆம் தேதி தனது பிறந்தநாளன்று புதிய கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கோவை, மதுரை, திருப்பூர், நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரது பிறந்தநாளையொட்டி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் துரோகிகளை வென்றெடுக்க 2.0 அவதாரம் எடுக்கும் தலைவருக்கு வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது தமிழக அரசியலிலும், பாஜக வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரது பிறந்தநாளையொட்டி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b