CBSE ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ சர்ச்சை - டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடிய NSUI
புதுடெல்லி, 02 ஜூன் (ஹி.ச.) மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான CBSE, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய அறிமுகப்படுத்தியுள்ள On-Screen Marking (OSM) முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்று
உச்ச நீதிமன்றம்


புதுடெல்லி, 02 ஜூன் (ஹி.ச.)

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான CBSE, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய அறிமுகப்படுத்தியுள்ள On-Screen Marking (OSM) முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், காங்கிரஸ் மாணவர் அமைப்பான NSUI டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளது.

பாரம்பரிய கையால் திருத்தும் முறைக்கு பதிலாக, விடைத்தாள்களை ஸ்கேன் செய்து திரையில் பார்த்து மதிப்பெண் வழங்கும் டிஜிட்டல் முறைதான் OSM. மதிப்பீட்டில் வேகம், கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உயர்த்தும் நோக்கில் CBSE இந்த முறையை அறிமுகப்படுத்தியது.

ஆனால், இந்த முறை நடைமுறைக்கு வந்த பிறகு மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

NSUI மனுவில், ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்களில் பக்கங்கள் காணாமல் போதல், தெளிவற்ற படங்கள், முழுமையற்ற பதிவேற்றம், தவறான மதிப்பீடு போன்ற தொழில்நுட்ப குறைபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் மதிப்பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயர்கல்வி சேர்க்கை மற்றும் உதவித்தொகை வாய்ப்புகள் கூட ஆபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் மனுவில் வாதிடப்பட்டுள்ளது.

மேலும், சர்ச்சைக்குரிய விடைத்தாள்களுக்கு கையால் மீள் மதிப்பீடு மற்றும் நேரடி சரிபார்ப்பு நடத்த வேண்டும், OSM முறையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் மறுமதிப்பீட்டு தளத்தை கூடுதல் காலத்திற்கு திறந்துவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டுள்ளன.

CBSE தரப்பும், விடைத்தாள் அணுகல் தளத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முடிவுகள் வெளியான பின், 1.27 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சுமார் 3.87 லட்சம் விடைத்தாள் நகல்கள் கோரப்பட்டிருப்பது, மாணவர்களிடையே மதிப்பீட்டு முறையின் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால், CBSE-யின் புதிய டிஜிட்டல் மதிப்பீட்டு முறை கல்வி நிர்வாகத்தில் தொழில்நுட்ப முன்னேற்றமா, அல்லது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் அவசர முயற்சியா என்ற விவாதம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணை இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P