Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 02 ஜூன் (ஹி.ச.)
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில், தலைமை நீதிபதி உட்பட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை, 38 ஆக அதிகரிக்க நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷகீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா மற்றும் ஜம்மு காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் ஆகியோர் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று
(ஜூன் 02) மூத்த வழக்கறிஞர் மோகனா உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றனர்.
அவர்களுக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 1950 முதல் தற்போது வரை வெறும் 10 பேர் மட்டுமே வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பட்டியலில் 11வது நீதிபதியாக வி.மோகனாவும் இணைந்துள்ளார்.
கோவை சட்டக் கல்லுாரியில் ஐந்து ஆண்டுகால சட்டப்படிப்பை முடித்த நீதிபதி வி.மோகனா, மூத்த குடிமக்களின் சொத்துரிமை, கர்நாடக ஹிஜாப் தடை உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதிட்டவர்.
பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ராவிற்கு பின், வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த இரண்டாவது பெண் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தள்ளது.
குறிப்பாக டில்லியில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா வழக்கறிஞராக பயிற்சி செய்தபோது. அவரிடம் ஜூனியராக பணியாற்றியவர் தான் தற்போது நீதிபதியாக நியமிக்கப்பட்ட வி.மோகனா என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b