Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம், 02 ஜூன் (ஹி.ச.)
நாகை அடுத்த வடகரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹஜ்ரத் மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் அவர்களின் 100ஆம் ஆண்டு கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்த விழா கடந்த மே 26ஆம் தேதி முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நூற்றாண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு மற்றும் புனித சந்தனம் பூசும் வைபவம் திங்கட்கிழமை மாலை கோலாகலமாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் வடகரை பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. ஊர்வலம் சென்ற வழியெங்கும் திரண்டிருந்த இசுலாமியர்கள் மலர்களை தூவி, பக்தி பரவசத்துடன் துஆ ஓதி வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டியினரும், வடகரை ஜமாத்தார்களும் செய்திருந்தனர்.
மேலும், 100ஆம் ஆண்டு பெருவிழாவில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மும்மத பொதுமக்களும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தது விழாவிற்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது.
Hindusthan Samachar / GOKILA arumugam